இஸ்லாமாபாத்: அல் அரேபியா என்ற தொலைக்காட்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் நேர்காணல் அளித்துள்ளார். அதில், ”இந்தியாவுடன் ஆழமான, நேர்மையான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதற்கு சம்மதிக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே பற்றி எரியும் பிரச்சினைகளாக உள்ள காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதன் மூலம் தீர்வு காண முடியும்.
இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள்.நாட்டில் எந்த அளவுக்கு அமைதி இருக்கிறதோ அந்த அளவுக்கே முன்னேற்றம் இருக்கும். இரு நாடுகளும் சண்டையிட்டுக்கொண்டே இருந்தால் நேரமும் பணமும்தான் வீணாகும். இந்தியாவுடன் நாங்கள் 3 போர்களை சந்தித்துவிட்டோம். இந்த போர்கள் பாகிஸ்தானியர்களுக்கு கூடுதலான துன்பத்தையும், வறுமையையும், வேலைவாய்ப்பின்மையையுமே அளித்திருக்கின்றன. நாங்கள் எங்களுக்கான பாடத்தை தற்போது கற்றுக்கொண்டுவிட்டோம்.
ஏழ்மையை ஒழித்து வளமையை பெருக்க விரும்புகிறோம் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை நாங்கள் எங்கள் மக்களுக்கு கொடுக்க விரும்புகிறோம். குண்டுகள், வெடிமருந்துகள் ஆகியவற்றுக்காக நாங்கள் எங்கள் சக்தியை வீணடிக்க விரும்பவில்லை.” என்று ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.