புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய தடுப்பூசிகளில் ஒன்றான கோவேக்சினை தயாரித்து வழங்கும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தார், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் கூட்டு சேர்ந்து ‘பிபிவி 154’ என்ற பெயரில் மூக்கு வழியே செலுத்துகிற கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளனர். இந்த மூக்கு வழி தடுப்பு மருந்து, ‘இன்கோவாக்’ என்ற வணிகப்பெயருடன் சந்தைக்கு வருகிறது. இந்த தடுப்பு மருந்துக்கான அவசரகால பயன்பாட்டு அனுமதியை கடந்த நவம்பர் மாதம் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் வழங்கியது.
மேலும், இந்த தடுப்பு மருந்து கோ-வின் தளத்தில் இப்போது கிடைக்கிறது. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கான இந்த தடுப்பு மருந்து ஒரு ‘டோஸ்’ விலை ரூ.800 ஆகும். அதே நேரத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இந்த தடுப்பு மருந்து ரூ.325 என்ற விலையில் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்து, பூஸ்டர் டோஸ் தடுப்பு மருந்தாக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனத்தார் அறிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்புக்குழு தலைவர் டாக்டர் அரோரா கூறியிருப்பதாவது:- மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை பூஸ்டராக பயன்படுத்தலாம் என்று சொல்லி உள்ளனர். ஆனால் ஏற்கனவே கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதுவரை கொரோனாவுக்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மூக்கு வழியாக எடுத்துக் கொள்ளும் தடுப்பு மருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் 4-வது முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தும் திட்டம் எதுவும் இல்லை. ஏற்கனவே 2 தடவை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 3-வது முறையாக பூஸ்டர் தடுப்பூசியும் பெற்று உள்ளனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நன்றாகவே உள்ளது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து பல கட்டங்களில் சோதிக்கப்பட்டுள்ளது. அதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.