சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: நேற்று (டிசம்பர்.20) தென் மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிசம்பர்.21) தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். அதன் பிறகு மேற்கு – தென் மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக் கடல் நோக்கி நகரக் கூடும்.
இதன் காரணமாக 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 24 ஆம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்கள், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி,நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
21-ம் தேதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 22-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
25-ம் தேதி தென் தமிழக கடலோரப்பகுதிகள், மரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.