புதுடெல்லி: 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமையான இன்று தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்: ரூ.3 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு வருமான வரி இல்லை, ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 5% வரி, ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை ஆண்டு வருமானத்திற்கு 10 சதவீதம் வரி, ரூ,12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவீதம் வரி, ரூ.15 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் உடையவர்களுக்கு 30 சதவீதம் வரி, புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுவோரில், ஆண்டு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு இனி வருமான வரி கிடையாது. ஏற்கெனவே இந்த உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக இருந்த நிலையில், தற்போது இது ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2047-க்குள் சிக்கில் செல் அனீமியா எனப்படும் மோசமான ரத்தசோகை நோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும், பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடம், சுகாதாரம், நீர் ஆதாரம், மின்சாரம் ஆகியனவற்றை உறுதி செய்ய ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும். நாடு முழுவதும் 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக அதே இடங்களில் 157 நர்ஸிங் கல்லூரிகள் அமைக்கப்படும்.வேளாண் பெருமக்கள் நலன் கருதி கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளத் துறை மேம்பாட்டுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்.உயர் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும். நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வங்கி வைப்புத் தொகை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்வு. பெண்கள் வங்கிகளில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வைக்கும் தொகைக்கு 7.5% வட்டி வழங்கப்படும். இது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் அமலில் இருக்கும்.
கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான மாற்று எரிபொருள் திட்டத்திற்கு ரூ.35 ஆயிரம் கோடி வழங்கப்படும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி 66 சதவீதம் உயர்த்தப்படும். அதாவது, இத்திட்டத்திற்கு ரூ.79 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
விவசாய கடன் இலக்குத் தொகை ரூ.20 லட்சம் கோடி, பழங்குடி மக்களுக்கான வீடு, குடிநீர், சாலை, தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி
தற்போது, நாடு முழுவதும் 20 சதவீதத்துக்கும் குறைவானர்களே புதிய வருமான வரி முறையை பின்பற்றுவதாக தெரிகிறது. இந்த முறையில் வருமான வரிப் பிரிவு 80C மற்றும் 80D-யின் கீழ் வருமான வரிச்சலுகை கிடையாது.
புதிய வருமான வரி முறையைப் பொறுத்தவரையில், ஏற்கெனவே ரூ.5 லட்சத்துக்குள் வருமான வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட வேண்டியதில்லை. இந்த வரம்புதான் தற்போது உயர்த்தபட்டுள்ளது. இனி ரூ.7 லட்சத்துக்குள் வருமான வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட வேண்டியதில்லை.
சிகரெட் மீதான சுங்கவரி ,தங்கம், வெள்ளி, வைரம் மீதான இறக்குமதி வரி , தங்கக் கட்டியில் செய்யப்பட்ட பொருட்களுக்கு சுங்க வரி , சமையலறை சிம்னி சுங்க வரி 15 சதவீதம் , ரப்பர் மீதான இறக்குமதி வரி 25 சதவீதம் போன்றவற்றின் மீது வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டிவி பேனல்கள் மீதான வரி 2.5 சதவீதம், செல்போன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி , ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்படும் வைரங்கள் மீதான சுங்க வரி , இறால் உணவுகள் மீதான சுங்க வரி , ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இந்த வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.