ஐநா பாதுகாப்பு அவையில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த அவையில் 10 நாடுகள் தற்காலிக உறுப்பு நாடுகளாக இடம் பெறும் நடைமுறை உள்ளது. தற்காலிக உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். ஒவ்வொரு ஆண்டும் 5 நாடுகள் தற்காலிக உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா. பாதுகாப்பு அவையில் உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா, அயர்லாந்து, கென்யா, மெக்சிகோ, நார்வே ஆகிய நாடுகளின் பதவிக்காலம் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, இந்த 5 நாடுகளுக்கு மாற்றாக புதிதாக 5 நாடுகள் உறுப்பு நாடுகளாக ஐ.நா. பொது அவையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒருமனதாக தேர்வாகின. அவ்வாறு தேர்வான ஈக்வடார், ஜப்பான், மால்டா, மொசாம்பிக், ஸ்விட்சர்லாந்து ஆகிய 5 நாடுகள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டன.
ஐநா பாதுகாப்பு அவையின் அனைத்து உறுப்பு நாடுகளின் தூதர்கள் முன்னிலையில், இந்த 5 நாடுகளின் தூதர்கள் தங்கள் நாட்டு தேசியக் கொடியை ஐநா பாதுகாப்பு அவையில் ஏற்றும் பாரம்பரிய நிகழ்வு நேற்று நடைபெற்றது. மொசாம்பிக், ஸ்விட்சர்லாந்து ஆகிய இரு நாடுகளும் முதல்முறையாக ஐ.நா. பாதுகாப்பு அவையில் இடம் பெற்றுள்ளன. ஐநா பாதுகாப்பு அவையில் தங்கள் நாட்டின் கொடியை ஏற்றியது வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணமாக உணர்ந்ததாக அதன் தூதர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.