சென்னை : சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக, சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை சந்திப்பில் இருந்து டாக்டர் அம்பேத்கர் சாலை சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம் செய்யபடவுள்ளது. இதன் காரணமாக 6-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையிலான ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் ஆற்காடு சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
அதன் விவரம் :- * வடபழனியில் இருந்து ஆற்காடு சாலை வழியாக கோடம்பாக்கம் மேம்பாலத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம்.
* யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலையில் ஆற்காடு சாலை சந்திப்பில் இருந்து ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் மாநகர பஸ்கள் நேராக டாக்டர் அம்பேத்கர் சாலைக்கு ஆற்காடு சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு, மேற்கண்ட வாகனங்கள் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை, ரங்கராஜபுரம் பிரதான சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.
* விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் தியாகராயநகர் செல்ல ஸ்டேஷன் வியூ சாலை மற்றும் பசுல்லா மேம்பாலம் வழியாக சென்று இலக்கை அடையலாம்.
* விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பில் இருந்து நேராக ஆற்காடு சாலைக்கு செல்ல தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட வாகனங்கள் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை, 2-வது குறுக்கு தெரு மற்றும் 2-வது பிரதான சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.