ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில், கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தக்காளியின் வரத்து குறைய தொடங்கியதால் விலை திடீரென அதிகரித்தது. மொத்த விற்பனை கடைகளில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும் வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரையிலும் விற்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை சற்று குறைந்தது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கும், சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கும் விற்கப்படுகிறது.