சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில், போக்குவரத்து பாதுகாவலர்கள் அமைப்புக்கான அலுவலகத்தை, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- போக்குவரத்து பாதுகாவலர்கள் அமைப்பு ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. சென்னையில் அதிக விபத்துகள் நடப்பதை தடுக்கும் நோக்கில், நகரில் அபாயகரமான பகுதி என்ற வகையில் 104 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் என்ஜினீயர்கள், மாநகராட்சிகள், ஐ.ஐ.டி. பிரிவினர் உள்ளடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். பொது இடங்களில் அத்துமீறல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இதுதொடர்பான புகார்களில் உடனடி நடவடிக்கை எடுக்க போலீசாரை நாங்கள் அறிவுறுத்தியிருக்கிறோம். மாணவர்கள் மோதல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது வரை சென்னையில் ‘யூ-டியூப்’ சேனல் நிறுவனத்தினர் மீது புகார்கள் வரவில்லை. புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கொலை போன்ற சமூகவிரோத செயல்களை தடுக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. தேவைப்படுவோரை குண்டர் சட்டத்திலும் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். நமது சட்டம்-ஒழுங்கு போலீசார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகள் மூலம் கொலை சம்பவங்கள் கடந்த ஆண்டை விட குறைந்திருக்கின்றன. குட்கா, மாவா போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச்செல்லும் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களை கண்டறிந்து எச்சரித்து வருகிறோம். 2004-ம் ஆண்டு முதல் தீர்க்கப்படாத கொலை வழக்குகள் 8 என்ற எண்ணிக்கையில் உள்ளன. அந்த வழக்குகளை தீர்த்து வைக்க சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.