தமிழக பகுதிகளின் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று மற்றும் மாலை கேரளா, இலட்சத்தீவு அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் அறிவுறுத்தியுள்ளது.