திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெற்குன்றம் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கஞ்சா புழக்கம் குறித்து தட்டிக்கேட்ட நாகராஜ் என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த விக்கி என்கின்ற விக்னேஷ் கத்தியால் வெட்டினார். இதனால் படுகாயமடைந்த நாகராஜ் தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக ஊர் மக்கள் சார்பில் நெற்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விக்னேஷ் கடந்த ஒன்றாம் தேதி, பொதுமக்கள் புகார் கொடுக்க உதவிய வார்டு உறுப்பினர் பாப்பாத்தி அம்மாளின் வீட்டின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து, வெடிகுண்டு வீசிய சம்பவம் குறித்து சோழவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், தலைமறைவாக இருந்த விக்னேஷ் கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, முறைப்படி கொரோனோ பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால், பூதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது உடன் வந்த காவலர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கைதி விக்னேஷ் வாகனத்தில் இருந்து கீழே குதித்து அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இதனால், அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் தப்பி ஓடிய விக்னேசை தீவிரமாக தேடி வருகின்றனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் காவல்துறையினரின் வாகனத்திலிருந்து வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.