ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். அன்று நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது என எச்சரித்தனர். 10-க்கும் மேற்பட்ட படகுகளில் வலைகளை அறுத்து கடலுக்குள் மூழ்கடித்தனர்.
இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் அச்சமடைந்த மீனவர்கள், மீன்பிடிக்காமலேயே ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். கரை திரும்பிய மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், டீசல் விலை உயர்வால் மீன்பிடித் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கி டீசல் போட்டுக் கொண்டு கடலுக்குச் சென்றாலும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல் நீடித்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.