சென்னை : தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் விதமாக கடந்த தி.மு.க. ஆட்சியில் ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் பின்னர் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழா மீண்டும் இந்த ஆண்டு புத்துணர்வோடு நடத்தப்பட்டது. தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் தமிழக நாகரிகம், பண்பாடு மற்றும் நாட்டுப்புற கலைகளை அடையாளப்படுத்தக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’வை சென்னை தீவுத்திடலில் கடந்த 13-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மொத்தம் 18 இடங்களில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கும்பாட்டம், தெருக்கூத்து என தமிழர்களின் பாரம்பரிய கலைகளை 600-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் தினந்தோறும் மாலை நேரங்களில் அரங்கேற்றினார்கள்.
கனிமொழி எம்.பி.யின் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியை சென்னைவாசிகள் மிகவும் ஆர்வத்தோடு கண்டு ரசித்தனர். கடந்த 14-ந் தேதி முதல் நடைபெற்று வந்த சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவின் கடைசி நாள் நேற்று ஆகும். காணும் பொங்கல் தினமான நேற்று மாலை நேரத்தில் பாரம்பரிய கலைகளை பார்க்க பொதுமக்கள் ஆர்வத்தோடு குவிந்தனர்.
இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற மாநகராட்சி விளையாட்டு மைதானங்கள், தீவுத்திடல், கடற்கரைகள், பூங்காக்களில் கூட்டம் அலைமோதியது. கடந்த 4 நாட்கள் நடைபெற்ற சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நேற்று நிறைவடைந்தது. சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.