சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து, உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாகிட புதுமை பெண் திட்டம் கொண்டு வரப்பட்டது. (5.9.2022) அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
புதுமைப் பெண் திட்டத்தின் முதற்கட்டத்தில் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் இடைநிற்றலில் இருந்து 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வியில் சேர்ந்து பயனடைந்துள்ளனர். இந்த நிலையில், மேலும் 1.04,347 மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) தொடங்கி வைக்கிறார். திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெறவுள்ள விழாவில், புதுமைப் பெண் திட்டத்தினை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார் உடன், அரசு உயர் அதிகார்களும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.