அங்காரா: மேற்கு ஆசியா, தென்கிழக்கு ஐரோப்பிய பகுதியில் அமைந்துள்ள துருக்கி தென்கிழக்கு பகுதியில் காஜியன்டப் நகரை மையமாகக் கொண்டது. அங்கு நேற்று அதிகாலை 4.17 மணிக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 24 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவானது. இதில் 2,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட நேற்று நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்து ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் முதல் பூகம்பத்துக்கு பிறகு 78 முறை அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இதில் சில அதிர்வுகள் ரிக்டர் அலகில் 6.5-க்கும் அதிகமாக பதிவாகின. நேற்று பிற்பகல் 1.30 மணிஅளவில் துருக்கியின் மத்திய பகுதியில்மீண்டும் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.5 ஆக பதிவான இந்த பூகம்பம், முதல் பூகம்பம் ஏற்பட்ட காஜியன்டப் பகுதியில் இருந்து 96 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. துருக்கியில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் 3-வது பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6 ஆக பதிவானது.
துருக்கி அதிபர் எர்டோகன் கூறியிருப்பதாவது: பூகம்பத்தால் துருக்கியின் 10 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான ஆம்புலன்ஸ், விமானப் படை சரக்கு விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மீட்புப் படை வீரர்கள் துருக்கிக்கு வந்துள்ளனர்.
சிரியா: துருக்கியின் அண்டை நாடான சிரியாவின் வடக்குப் பகுதியில் பூகம்பம் கடுமையாக உணரப்பட்டது. அலெப்போ, லதாகியா, ஹமா, டார்டஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அந்த நாட்டில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சிரியா அதிபர் ஆசாத், தலைநகர் டமாஸ்கஸில் நேற்று உயர்நிலை ஆலோசனை நடத்தினார். ராணுவம், அரசு ஊழியர்கள், தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறைகளை சேர்ந்தவர்களை மீட்புப் பணியில் முழுமையாக ஈடுபடுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
பூகம்பம் குறித்து அமெரிக்க புவியியல்துறை வட்டாரங்கள் கூறியதாவது: பூமிக்கு அடியில் அழுத்தம் அதிகமாகி சக்தி வெளியேற்றப்படும்போது தளத்தட்டுகள் நகர்கின்றன. டெக்டோனிக் என்ற இந்த தளத்தட்டுகளின் நகர்வால் பூகம்பம் ஏற்படுகிறது. அன்டோலியன் எனப்படும் தளத்தட்டுகள் மீது துருக்கிஅமைந்திருக்கிறது. இந்த தளத்தட்டு, யுரேசியா, ஆப்பிரிக்கா, அரேபிய தளத்தட்டுகளுக்கு இடையே சிக்கியுள்ளது. ஆப்பிரிக்க, அரேபிய தளத்தட்டுகள் நகரும்போது சாண்ட்விச் போன்று துருக்கி இடையில் சிக்குகிறது. இதன்காரணமாகவே அந்த நாட்டில் மிகப்பெரிய பூகம்பங்கள் ஏற்படுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், துருக்கி, சிரியாவுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இதன்படி, தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 2 குழுக்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைகின்றன. இந்த குழுக்களில் 100 வீரர்களுடன், பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, இந்தியாவில் இருந்து மருத்துவக் குழுக்கள், மருந்து பொருட்கள், நிவாரண பொருட்களும் துருக்கிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.