சென்னை, தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைமேற்கொள்கிறார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று சென்னையில் 909 பேருக்கும், செங்கல்பட்டு 352, காஞ்சிபுரம் 71, திருவள்ளூர் மாவட்டத்தில் 100 பேருக்கு என தமிழகம் முழுவதும் 2,069 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில், ஏற்கனவே முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தவும், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தும் இன்று முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.