நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31%லிருந்து 34% ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய அகவிலைப்படி 01.07.2022 முதல் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவர். இதனால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.1,947 கோடியே 60 லட்சம் கூடுதலாகச் செலவாகும் என்று அவர் கூறியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும், சுதந்திர போராட்ட வீரர்களின் வழித்தோன்றலுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.9000-லிருந்து ரூ.10000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.