சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான மக்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:- இயல், இசை மற்றும் நாடகத் துறைகளுக்கு கருணாநிதி தனது எழுத்தாற்றல் மூலமாக ஆற்றியுள்ள தொண்டின் நினைவாக பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது. இந்த நினைவுச்சின்னத்தை காணவரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ,சுனாமி, நிலநடுக்கம், புயல் ஆகியவற்றை முன்னறிய அங்கு கருவிகள் பொருத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படும். அதுபோன்ற ஆபத்தில் யாரும் சிக்கினால், வளாகத்தில் இருந்து மக்களை மீட்க பயிற்சி பெற்ற மீட்புப்படையினர் அங்கிருப்பார்கள்.மீட்பின்போது மின்சார வாகனங்கள், மீட்புப் படகுகள் பயன்படுத்தப்படும். மீட்புக்கு வசதியாக, ஒரு நேரத்தில் 300 பேருக்கும் மேற்படாத வகையில் மக்கள் அனுமதிக்கப்படுவர். கட்டுமானத்தின் போது ஏற்படும் கழிவுகள், சூழலியல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அகற்றப்படும். கடல் மண்ணரிப்பு, மண் சேமிப்பு போன்ற ஆய்வு, தேசிய கடல்சார் ஆய்வு மையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நினைவுச்சின்னம் 3 பகுதிகளாக கட்டப்படும். முதல் பகுதி, கருணாநிதி நினைவிடத்தில் இருந்து கடற்கரை வரை 220 மீட்டர் நீளம், 6 மீட்டர் உயரத்தில் காங்கிரீட் பாலம் கட்டப்படும். இரண்டாம் பகுதி, காங்கிரீட் பாலம் முடியும் மணல் பரப்பில் இருந்து கடலுக்குள் சில மீட்டர் நீளத்தில் இரும்பு பாலம் அமைக்கப்படும். கடற்கரையின் தன்மை மாறாத வகையில் அதற்கான தாங்கு தூண்கள் அமைக்கப்படும். மூன்றாம் பகுதி, இரும்பு பாலம் முடியும் இடத்தில் இருந்து கடலுக்குள் 360 மீட்டர் தொலைவில் பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும்.
பேனா நினைவுச்சின்னத்திற்கு செல்லும் பாலத்திற்கு 15 மீட்டர் இடைவெளியில் காங்கிரீட் தூண்கள் அமைக்கப்படும். நல்ல இடைவெளியுடன் தூண்கள் அமைக்கப்படுவதால், மீன்பிடி படகு போக்குவரத்திற்கு இடையூறு இருக்காது. பேனா நினைவுச்சின்னம் 30மீ.உயரமும், 3 மீ.விட்டமும் கொண்டதாக 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும். நினைவுச்சின்னத்தை அணுகும் பாலம் 9 மீ.அகலமும், கடல் பரப்பு மற்றும் மணல் பரப்பில் இருந்து 6 மீட்டர் உயரமும் கொண்டதாக கட்டப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. அதுதொடர்பான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், இடர் மதிப்பீடு, பேரிடர் மேலாண்மைத் திட்டம் ஆகிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் நேரிடக்கூடிய பேரிடர்களை கருத்தில் கொண்டு, அவற்றைத் தாங்கும் வகையில் உரிய தொழில்நுட்பத்தின்படி கட்டுமானம் மேற்கொள்ளப்படும்.