கடலில் வாழும் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல தமிழக அரசு ஆண்டுதோறும் தடை விதித்து வருகின்றது. அதன்படி, இந்த ஆண்டும் நடைமுறையில் இருந்த மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இதனால், கடந்த இரண்டு மாதங்களாக இருந்ததுபோல் இல்லாமல் மீன்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.