அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைச் சட்டத்தை ரத்து செய்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த நாட்டு பெண்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் ஜோ பைடனும், கருக்கலைப்பு உரிமை தடை சட்டத்துக்கு எதிராக “அமெரிக்காவுக்கு இது கருப்பு நாள், இந்த தீர்ப்பு ஜனநாயகத்தை 50 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளும்” என்று தனது அழுத்தமான கருத்தை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, சொந்த ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் நிர்வாக ஆணையில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். மேலும் கருக்கலைப்பு தடை அமலில் உள்ள மாகாணங்களில் நாடாளுமன்றம் மூலம் தடையை நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இந்த நிலையில், கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் வகையில் இரு சட்ட மசோதாக்கள் பிரநிதிகள் சபையில் ஒப்புதல் வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்தும் பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், செனட் சபையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. செனட் சபையில் மசோதா நிறைவேற்ற 10 குடியரசு கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.