சென்னை: தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஆனாலும் கஞ்சா, பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து ஒவ்வொரு பகுதியிலும் சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 11-ந்தேதியை போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக தேர்ந்தெடுத்து உள்ளோம். அதன்படி பள்ளி, கல்லூரிகளில் இது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். அதன்படி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் போதையின் தீமைகள் குறித்த காணொலி காட்சிகளும் பல இடங்களில் காண்பிக்கப்பட்டது. போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க ஒவ்வொருவரும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அப்போது கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், விற்பவர்களை பிடித்து குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வந்தனர். இந்த சூழலில் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் கிலோ கணக்கில் கோகைகன் போதைப்பொருள் பிடிபட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. இலங்கையில் இருந்து சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தாதா கஞ்சிபாணி இம்ரான் தமிழகத்திற்குள் ஊடுருவியதாகவும் ராமேசுவரத்துக்கு கள்ளத்தோணியில் தப்பி வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதைத் தொடர்ந்து கடலோர பகுதிகள் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ,போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவாக பேசினார். தமிழ்நாடு முழுவதும் சோதனை நடத்தி போதைப் பொருள் நடமாட்டத்தை வேரோடு ஒழிக்க பாடுபட வேண்டும். போதைப் பொருள் கடத்தல்காரர்களை கண்டுபிடித்து கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.