கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் உள்ள காவேரிநகர் பகுதியை சேர்ந்தவர் கலைமணி (52). கரூர் அடுத்த தாளியாபட்டி அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக கலைமணி பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி வங்கி அதிகாரி என்ற பெயரில், மர்ம நபர் ஒருவர் ஆசிரியருக்கு செல்போனுக்கு தொடர்புகொண்டு பேசியுள்ளார். அவரின் பேச்சில் சந்தேகமடைந்த ஆசிரியர் இணைப்பை துண்டித்து விட்டு, செல்போனையும் வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது ஆசிரியரின் செல்போன் எண்ணுக்கு வங்கி தொடர்பான போலியான லிங் ஒன்று வந்துள்ளது. அதை ஆசிரியரின் மகள் கிளிக் செய்துள்ளார். இதனையடுத்து, ஆசிரியரின் வங்கி பதிவு செல்போன் எண்ணுக்கு வந்த OTP எண்ணையும் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து எதுவும் அறியாத ஆசிரியர் இந்த சம்பவம் நடந்த 5 நாட்களுக்கு பிறகு தனது வங்கிக் கணக்கில் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் சென்று பார்த்தபோது ரூ.3 லட்சம் மர்ம நபர்களால் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அதேபோல ஆசிரியரின் மற்றொரு வங்கிக் கணக்கில் ரூ.24 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்தை நூதன வங்கி மோசடியில் ஆசிரியர் இழந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் கலைமணி கரூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து கரூர் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.