சென்னை : சென்னை செனாய்நகரில் செயல்பட்டு வந்த திரு.வி.க. பூங்கா கடந்த 2011-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் பணிக்காக மூடப்பட்டது. மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்த நிலையில் 2018-ம் ஆண்டு இந்த பூங்கா பெருநகர சென்னை மாநகராட்சி வளர்ச்சி குழுமத்தின் நிதி உதவியுடன் ரூ.18 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது. இதன் காரணமாக மனதை மயக்கும் செயற்கை வண்ண நீரூற்று, ஆண், பெண்களுக்கென தனித்தனியாக அதிநவீன பயிற்சி கூடங்கள் என 9 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் இந்த பூங்கா புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த பூங்காவில் 8 வடிவ நடைபாதை, இசை நீரூற்று, பூப்பந்து, கூடைப்பந்து, பீச் வாலிபால் மைதானம், கிரிக்கெட் பயிற்சி மையம், யோகா மையம், படிப்பகம், குழந்தைகள் பூங்கா, சறுக்கு பயிற்சி, பல வண்ண செயற்கை நீரூற்று, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பெண்களுக்கு தனியாக கூடைப்பந்து, பூப்பந்து, கடற்கரை கைப்பந்து மைதானங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோன்று பூங்காவில் ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டு பசுமையாக காட்சி அளிக்கின்றன. பொதுமக்கள் இளைப்பாற நவீன வசதிகள் கொண்ட இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.