ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உலக பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நெவால், ஹாங்காங்கின் செயுங் கன் யி-யை எதிர்த்து விளையாடினார். 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா 21-19, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். சாய்னா, 2ஆவது சுற்றில் ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவுடன் மோத இருந்த நிலையில், அவர் போட்டியில் இருந்து விலகியதால் சாய்னா நேரடியாக 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அதேபோல், மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவில் ட்ரீசா ஜாலி மற்றும் புல்லேலா காயத்ரி இணை 21-11, 21-13 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் லோ யீன் யுவான், வலேரி சியோவ் இணையை தோற்கடித்தனர்.