கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் சமூக வலைதளத்தில் மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப துறை மூலம் கிடைத்த வருவாய் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கேரளாவில் டெக்னோபார்க்கில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் 2021-22ம் ஆண்டில் ஏற்றுமதி வருவாய் ரூ.9775 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை காட்டிலும் 15 சதவீதம் அதிகமாகும்.
மேலும் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. வரியை துல்லியமாக செலுத்தியதற்காக இந்திய அரசின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. கேரளாவில் டெக்னோ பார்க்கில் கடந்த 1½ ஆண்டில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 301 சதுர அடியில் 78 நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 703 சதுர அடியில் 37 நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுமானங்கள் காரணமாக டெக்னோ பார்க் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கேரளாவின் தொழிற் வளர்ச்சிக்கும், வருவாய்க்கும் டெக்னோ பார்க் பெரும் பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.