டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 250 உறுப்பினர்களில், தமிழகத்தைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில் திமுகவை சேர்ந்த 6 பேரின் பதவிக்காலம் அடுத்த ஜூன் மாதம் 29ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அதேபோல, இந்தியா முழுவதும் உள்ள 14 மாநிலங்களைச் சேர்ந்த 51 உறுப்பினர்களின் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ளது. எனவே காலியாக உள்ள மொத்தம் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகளுக்கு வரும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடக்க இருப்பதாக சமீபத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் ஆறு இடங்களுக்கு திமுக கட்சி சார்பில் வேட்பாளர்களாக சு.கல்யாணசுந்தரம், கிரிராஜன், ராஜேஷ்குமார் ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், அதிமுக கட்சி சார்பில் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர் மனுதாக்கல் செய்தனர். அதேபோல, காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி நேற்று மாலையுடன் முடிவுற்ற நிலையில் வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.