தஞ்சை : பருவம் தவறி பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பல ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட பயிர்கள் மழை நீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்தார்.
டெல்டா மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் நேற்று மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் பின்னர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தையும் ஆய்வு செய்தனர். மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறையின், பெங்களூரு மற்றும் சென்னை தர கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் 3 பேர் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து இன்று தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழு அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.