புதுடெல்லி : பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.இதனை தொடர்ந்து , மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியிலிருந்து நீக்கியது. ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நாடு முழுவதும் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின் முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு முதன்முறையாக இன்று செல்கிறார். இந்த பயணத்தின்போது, பொது கூட்டம் ஒன்றில் கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களிடையே ராகுல் காந்தி உரையாற்ற இருப்பதாகவும், மேலும் சாலை வழி பேரணி செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.