ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது.
செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. ஏற்கனவே பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், டெலியோஸ்-2 செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. டெலியோஸ்-2 செயற்கைக்கோள் மூலம் புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.