திருவனந்தபுரம்: கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்லும் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்தார். அப்போது மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான், மாநில முதல்வர் பினராய் விஜயன், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் பேசிய பிரதமர் கூறியதாவது”கேரளா மாநிலம் படிப்பறிவுக்கும் விழிப்புணர்வுக்கும் பெயர் பெற்ற மாநிலம். கடின உழைப்பும் மனிதாபிமானமும் இங்குள்ள மக்களின் அடையாளங்களில் ஒன்றாகும்” என்று கூறியுள்ளார்.
அதனைதொடர்ந்து, பிரதமர் மோடி கொச்சி நீர்வழி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்தார் . கொச்சி ‘வாட்டர் மெட்ரோ’ அத்துறைமுக நகரைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும். உயர் நீதிமன்றம் – விபின் மற்றும் விட்டிலா – கக்கநாட் இடையே என இரண்டு முனையங்கள் இயங்கும். இந்த சேவையை பயன்படுத்தி பயணிகள் விபினில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு 20 நிமிடங்களில் செல்லலாம். விட்டிலாவில் இருந்து கக்கநாடு பகுதிக்கு 25 நிமிடங்களில் செல்லலாம். அன்றாடம் காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை சேவை தொடரும். பீக் ஹவர்களில் உயர் நீதிமன்றம் – விபின் இடையே 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கொச்சி வாட்டர் மெட்ரோ இயக்கப்படும். பயணிகளின் வசதியைக் கருதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.20 முதல் ரூ.40 வரை டிக்கட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொச்சி ‘வாட்டர் மெட்ரோ’ திட்டமானது ரூ.1,137 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 8 எலக்ட்ரிக் ஹைப்ரிட் படகுகள் கொச்சி ‘வாட்டர் மெட்ரோ’ சேவையில் இணைக்கப்படுகின்றன.