தமிழ்நாடு மின்சாரவாரிய துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது: மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கையாக நேற்று கடுமையான மழையும், காற்றும் இருந்த நிலையிலும் நள்ளிரவு வரை எங்கும் மின்தடை இல்லை. ஆனால் நள்ளிரவுக்குப் பிறகு காற்று வேகம் அதிகமானதால் எந்தவித உயிர்ச்சேதமோ, பாதிப்போ ஏற்படாதிருக்க மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 355 துணைமின் நிலையங்களில், 10 துணை மின் நிலையங்களில் மட்டுமே மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 33கி.வோ., 11 33கி.வோ.,.22 கி.வோ., 110 கி.வோ.,230 கி.வோ., மற்றும் 400 கி.வோ., உட்பட மொத்தம் 622 பீடர்களில் கன மழை மற்றும் வேகமான காற்று வீசியதின் காரணமாக மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.நேற்று இரவு முழுவதும் சென்னையில் 1,100 பணியாளர்களும், ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 11,000 பணியாளர்களும் களத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்று அதிகாலை தொடங்கி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்ட இடங்களில் களஆய்வு செய்து எந்த இடத்தில் பாதிப்புகள் உள்ளதோ அவற்றை எல்லாம் உடனுக்குடன் சரி செய்து இன்று மதியத்திற்கு முன்னதாகவே சீரான மின் விநியோகம் வழங்கப்படக் கூடிய வகையில் களத்தில் பணியாளர்கள், அலுவலர்கள் என அனைவரும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். எனவே, இன்று மதியத்திற்கு முன்னதாகவே அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்விநியோகம் வழங்கப்படும். புறநகர் பகுதிகளில் எந்தெந்த இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளது என்பதை களத்திலே சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்பதையும் தெரிவித்துள்ளார்.