போக்குவரத்து விதி மீறலை தடுக்கவும் சாலைகளில் உயிரிழப்பை குறைக்கவும் புதிய மோட்டார் வாகன தடுப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் ஆண்டுக்கு ரூ. 40 கோடி அளவில் போக்குவரத்து விதிமீறல் அபராதம் வசூல் செய்யப்பட்டு வருவதாகவும், புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டால் ஆண்டுக்கு ரூ. 200 கோடி செலவில் அபராதம் வசூல் செய்யப்படும் எனத்தெரிவித்துள்ளார். புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டால் தற்போது உள்ள அபராதத்தை விட 10 முதல் 20 மடங்கு அபராதங்கள் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு 100 ரூபாய்க்கு பதிலாக ஆயிரம் ரூபாய் அபராதமும், அதிவேகமாக வாகனத்தை இயக்குபவர்களுக்கு ஆயிரம் முதல் 2000 வரை அபராதம் வசூல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனம் மற்றும் குறைந்த அளவிலான பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிவேகமாகச் சென்றால் இரண்டு முதல் நான்கு ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பயணித்தால் தற்போது விதிக்கப்படும் 500 ரூபாய் அபராதம் பதிலாக 5000 ரூபாய் வசூலிக்கப்படும். அதிக அளவு பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு 2500 ரூபாய் அபராதம் அதற்கு பதிலாக 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.