அகமதாபாத் : பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100). அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது சில நாட்களுக்கு முன்பு அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில், ”அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயார் ஹீராபென் மோடி, அகமதாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதையடுத்து பிரதமர் மோடி நேரில் வந்து பார்த்து உடல் நலம் விசாரித்தார். தொடர்ந்து நேற்று மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹீராபென் மோடி குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரதமரின் தாயார் இன்று காலை மறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது தாயார் இறந்தது குறித்து பிரதமர் மோடி தனது டுவீட்டர் பக்கத்தில் கூறும்போது, “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன். 100வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே எப்போதும் நினைவில் இருக்கிறது” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.