சென்னை : தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. இந்த நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டியை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் எடப்பாடி பகுதியை சேர்ந்த ஜோதிடரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. மே முதல் வாரத்தில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கார் ஓட்டுநர் கனகராஜ் இறப்பதற்கு முன் ஜோதிடரை சந்தித்துள்ளார், கனகராஜை கடைசியாக சந்தித்துப் பேசிய நபர் என்ற அடிப்படையில் ஜோதிடரிடம் விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக்குழு முடிவு செய்துள்ளனர்.