தமிழகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்கள், சொந்த ஊருக்கு செல்ல, போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்து 888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், சென்னையில் மட்டும் 10 ஆயிரத்து 518 சிறப்புப் பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளியை முன்னிட்டு, 91 ஆயிரம் பேர் சிறப்புப் பேருந்துகள் மூலம் சொந்த ஊர் புறப்பட்டுச் சென்றதாகவும், இந்தாண்டு சிறப்பு முன்பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், ஆம்னி பேருந்துகளில் இணையதளம் மூலமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டறிந்தால், கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். சென்னையில் இருந்து பயணிப்பவர்கள், தங்கள் பகுதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல கூடிய பேருந்து நிலையங்களை எளிதில் அடைய கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. சிறப்பு பேருந்துகள் பற்றாக்குறை இல்லாத வகையில் 750 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் பயணிகள் பட்டாசுகளை எடுத்து செல்ல கூடாது என அறிவுறுத்தபட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் சிவசங்கர், அவ்வாறு எடுத்து செல்வது தெரிந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.