புதுடெல்லி: பிரதமர் மோடி, 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்து பிபிசி தயாரித்துள்ள ‘இந்தியா – மோடிக்கான கேள்விகள்’ என்ற ஆவணப்படத்திற்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பொதுநல மனுக்கள் பிப்ரவரி 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்தக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
என்.ராம் மற்றும் பிரஷாந்த பூஷனுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சியு சிங், தகவல் தொழில் நுட்ப விதிகளின்படி அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்தி எவ்வாறு மனுதாரர்களின் ட்விட்டர் பகிவுகள் நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் பல்கலைக்கழகத்தில் 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் அப்போதைய அம்மாநில முதல்வராயிருந்த நரேந்திர மோடியின் பின்னணி குறித்த ஆவணப்படத்தைப் பார்த்த மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலானா அமர்வு முன்பு, வழக்கறிஞர் பிஎல் ஷர்மா, மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங் ஆகியோர் பிபிசி ஆவணப்படத் தடைக்கு எதிரான தங்களது பொதுநல மனுக்களை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வாய்மொழியாக கோரிக்கை விடுத்தனர். இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள், மனுக்களை அடுத்த வாரம் பிப்ரவரி 6 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.