சென்னை, கடந்த 2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு இருப்பதாகவும், அதனை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 27-ந்தேதியில் இருந்து குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4-வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 140-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் .
மேலும் , போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்ளுடன் தொடக்கக் கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் ஆகியோர் ஏற்கனவே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 30 நிமிடம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.