நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரின் மகனும் கேரளா வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை ஜூன் 1ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, ராகுல் காந்தி கடந்த 2ஆம் தேதியும், சோனியா காந்தி கடந்த 8ஆம் தேதியும் ஆஜராக குறிப்பிட்டிருந்தது. ஆனால், ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்ததால், நேரில் ஆஜராக அவகாசம் கேட்டு மின்னஞ்சல் மூலம் அமலாக்கத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்று இன்று (13ஆம் தேதி) அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை புதிய சம்மனை விடுவித்திருந்தது. இந்தநிலையில் இன்று ராகுல் காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அப்போது, அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விதிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவை மீறி ராகுல் காந்தியுடன் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், மாநில தலைவர்கள், நிவாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் பேரணியாக சென்றனர். இவர்களைத்தொடர்ந்து மத்திய அரசு பழிவாங்கும் நடவடிகையாக சோனியா மற்றும் ராகுலை இந்த வழக்கில் ஈடுப்படுத்துவதாக இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினரின் சார்பில் இன்று கண்ட ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்றது. முன்னதாக, இந்தியாவில் வர இருக்கும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அதுதொடர்பான பணிகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே ஈடுபட்டு இருந்த சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், அவருக்கு கடந்த ஏப்ரல் 31ஆம் தேதி லேசான காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் கொரோனா தொற்றுக்கு ஆளானார். பின்னர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட சோனியா அமலாக்கத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் கடந்த 8ஆம் தேதி ஆஜராகவில்லை. இதையடுத்து நேரில் ஆஜராக சோனியா தரப்பில் அமலாக்கத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து அவர் 23ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.