காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தாங்கி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் நெற்பயிர்களை அதிகமாக விளைவிக்கின்றனர். இவர்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து பயிர்களைப் பாதுகாத்து வருகின்றனர். அதன்படி, இந்திய உழவர் உரக் கூட்டு நிறுவனம் (இப்கோ) விவசாயத்தில் ஒரு புதிய புரட்சியாக உலகிலேயே முதல் நானோ யூரியாவை இந்திய விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. அதனை தமிழகத்திலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இப்கோவின் நேனோ யூரியா மருந்தினை ட்ரோன் மூலம் நேரடியாக விவசாய நிலத்தில் தெளிக்கும் முறையை காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் கையாண்டு வருகின்றனர். வேலையாட்கள் பற்றாக்குறை, ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால் நவீன தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ள விவசாயிகள், நிலத்தை உழுவதற்கு மாடுகளை மாற்றிவிட்டு டிராக்டர் மூலமும், தண்ணீர் பாய்ச்சுவதற்கு சொட்டு நீர் பாசனம், நாற்று நடுவதற்கும், அறுவடை செய்வதற்கும் வேலையாட்களுக்கு பதிலாக இயந்திரங்களையும் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிப்பதற்கு மட்டும் வேலையாட்களை வைத்து மோட்டார் ஸ்பிரேயர் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தை உழுவதற்கும், தண்ணீர் பாய்ச்சுவதற்கும், நாற்று நடுவதற்கும், கதிர் அறுப்பதற்கும், நவீன தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டு வரும் விவசாயிகள், தற்பொழுது மேலை நாடுகளுக்கு இணையாக பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க டிரோன் எந்திரங்களையும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். நானோ யூரியா என்பது நானோ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட உரமாகும். இந்த நானோ யூரியா 500 மில்லி லிட்டர் பாட்டிலில் விவசாயிகளுக்கு கிடைக்கின்றது. இதன் விலை ரூ.240. இது சாதாரண குருணை யூரியாவை விட 10 சதவீதம் விலை குறைவு. அரை லிட்டர் (500 மி.லி) நேனோ யூரியா ஒரு மூட்டை யூரியாவுக்கு நிகரான பலனை பயிர்களுக்கு அளிக்கிறது. இந்த நானோ யூரியாவை இலைவழி தெளிப்பாக பயன்படுத்தும்போது இலையில் உள்ள துவாரங்களின் மூலம் உறிஞ்சப்பட்டு பயிர்களுக்குத் தேவையான தழைச்சத்தை சீராக 20 முதல் 25 நாட்களுக்கு பயிர்கள் பசுமையாக இருக்க உதவி செய்கிறது. இந்த நேனோ யூரியாவை விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அல்லது இப்கோ நிறுவன முகவர்கள் இடமும் தங்கு தடையின்றி கிடைக்கும்.