உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முலாயம் சிங் யாதவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 3 முறை உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக இருந்தவர் முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமாவார். இவரின் இறப்புக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதில், பிரதமர் மோடி, “மாநில மற்றும் தேசிய அரசியலில் தனித்துவம் மிக்கவராக திகழ்ந்தவர், எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் முக்கிய வீரராக இருந்தவர்” என்று புகழாரம் சூட்டி முலாயம் சிங் யாதவ் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல், “ஓபிசி இட ஒதுக்கீட்டிற்காக நின்றவர், மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் முலாயம் சிங் யாதவ். முலாயம் சிங் யாதவ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், மூத்த அரசியல்வாதி முலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும், அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.