சென்னை: சென்னையில் கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 15 நாட்களாக கொசு ஒழிப்பு பணிகளில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், ஆறுகளில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் மழைநீர் வடிகாலில் 250 கி.மீ. நீளத்திற்கு கொசுக்கொல்லி நாசினி தெளித்தும், 239 கி.மீ நீளத்திற்கு கொசு ஒழிப்பு புகைபரப்பியும், நீர்நிலைகளில் 58.34 கி.மீ. நீளத்திற்கு கொசுக்கொல்லி நாசினி தெளிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 2,919 தெருக்களில் வாகனங்கள் மற்றும் கையினால் இயக்கும் எந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்புப் புகை பரப்பும் பணியும் மேற்கொள்ளப்பட்டன.
ஓட்டேரி நல்லா கால்வாய், ரெயில்வே கால்வாய், ஏகங்கிபுரம் கால்வாய், கூவம் ஆறு, விருகம்பாக்கம் கால்வாய் ஆகிய பகுதிகளில் டிரோன்கள் மூலம் கொசுப்புழு ஒழிப்பு மருந்து இன்று தெளிக்கப்பட்டது. இன்று காலையில் தொடங்கிய இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 6 டிரோன்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுஅடுத்த 10 நாட்களில் இந்த பணிகள் மிகவும் வேகமாக நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.