புதுவண்ணாரப்பேட்டை : சென்னை ஆர்.கே.நகர் டி.எச்.ரோடு கலைஞர் திடலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 2 ஆயிரம் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் 40 பேருக்கு தையல் எந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.10 கோடியில் விளையாட்டு மையம், ரூ.6 கோடியில் நடைபாதை பூங்கா அமைக்கப்படும் என்று சட்டசபை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. சமூகநீதி கொள்கையில் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார். மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக முதல்-அமைச்சர் திகழ்ந்து வருகிறார். பா.ஜ.க அரசை நாம் எதிர்க்க வேண்டும். இஸ்லாமியர்கள் நாட்டில் இருக்க கூடாது என்று சொல்லும் பா.ஜ.க. அரசை நம் நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.