நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினர் 5ஆவது நாளாக தடைவிதித்துள்ளனர். இதனிடையே, கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடக மாநில கபினி, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளில் நீர் நிரம்பி உள்ளது. இதனால், இரு அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு, இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடைகிறது. இதன்காரணமாக, ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 8ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.