நடிகர் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இந்த திரைப்படத்தில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாததால், தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. இதில் விசாரணை மேற்கொண்ட பொதுசுகாதாரத்துறை துணை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுசுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இதை விசாரணைக்கு ஏற்ற சைதாப்பேட்டை நீதிமன்றம் இருவரும் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையின்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விசாரணை வந்தபோது, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து, வழக்கை இறுதி விசாரணைக்காக ஆகஸ்ட் 10ஆம் தேதி தள்ளிவைத்துள்ளார். இதற்கிடையே, வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் தனுஷு-ம் வழக்கு தொடர இருப்பதாகவும், தற்போது அவர் கிரேமேன் படப் பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதால், சென்னை திரும்பிய பிறகு கையெழுத்து பெற்று, மனுத் தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதையும் சேர்த்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி) நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான தனுஷ் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆஜராவதில் இருந்து நடிகர் தனுசுக்கு விலக்கு அளித்து விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.