முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்ல இருக்கிறார். அங்கு அவர் பிரதமர் மோடியை நாளை சந்தித்து பேசவுள்ளார். அப்போது, தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தம், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் இருக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது உட்பட தமிழகத்துக்கான புதிய திட்டங்கள் குறித்தும் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர், புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.