சென்னை: இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தென்கழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 31-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபடைந்து வரும் 1-ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும்.
மேலும், இதன் காரணமாக வடதமிழக கடலோ மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 29-ம் தேதி லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோன்று, வரும் 30-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில ஒருசில இடங்களில் வரும் 31-ம் தேதி இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.