திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜிநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பெண் சாமியார் என்று சொல்லிக்கொள்ளும் சாராய வியாபாரி மகேஸ்வரி தலைமையில் சாராய கும்பல் ஒன்று தொடர்ந்து சாராயம் காய்ச்சியும், விற்பனை செய்தும் வந்துள்ளனர். இவர்கள் மீது பலமுறை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வந்தாலும் தொடர்ந்து சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது. இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் மகேஸ்வரி உள்பட சாராய கடத்தல் கும்பலை சேர்ந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தொடர் சாராய விற்பனை செய்ததால் கைது செய்யப்பட்டுள்ள மகேஸ்வரி, அவரது கூட்டாளிகளான சீனிவாசன், சின்னராசு, உஷா, ராணி, ஜோதி மற்றும் குடியாத்தம் கல்லபாடியை சேர்ந்த மோகன் ஆகிய 7 பேரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.