மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சி (நீலகிரி) 32, மேல் பவானி (நீலகிரி) 20, பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 14, ஹாரிசன் எஸ்டேட் செருமுள்ளி (நீலகிரி) 9, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 7, எமராலடு (நீலகிரி) 6, சோலையார் (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி) தலா 5, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), பார்வூட் (நீலகிரி) தலா 4, கூடலூர் பஜார் (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி) தலா 3, குந்தா பாலம் (நீலகிரி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), க்ளென்மோர்கண் (நீலகிரி) தலா 2 என மழை அளவு பதிவாகிவுள்ளது. மேலும், இன்று முதல் 10-08-2022 வரை கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல, இன்று மற்றும் நாளை ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதைத்தொடர்ந்து, வரும் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.