நீதி வேண்டும் என்ற தலைப்பில், அஇஅதிமுக கட்சியின் ஒருகிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயப்பிரதீப் நேற்று தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டுருந்தார். அதில், எங்களின் குடும்ப தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த இல்லமான கொடநாடு பங்களாவில் மர்மமான முறையில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உண்மை தொண்டர்களின் சார்பாக தாழ்மையுடனும் வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன். இவன், அம்மாவின் உண்மை தொண்டன் வி.ப.ஜெயப்பிரதீப் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரு அணிகளாக செயல்பட்டு தொண்டர்களின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள நிலையில் ஓபிஎஸ் மகனின் இந்த பதிவு இன்னும் அதிமுக தொண்டர்களை எரிச்சலூட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் உண்மை விசுவாசிகள் ஓபிஎஸ் மற்றும் அவரின் மகனை கமெண்டில் வருத்தெடுக்கவே, இன்று தனது நேற்றைய பதிவு குறித்த விளக்கத்தை அவர் பதிவிட்டுள்ளார்.
அதில், உண்மை ஒருநாள் வெல்லும் என்று தலைப்பிட்டு, ”கொடநாடு சம்பவம் பற்றி நான்கு வருடமாக நான் எதுவும் பேசவில்லை என்று சில நண்பர்கள் கூறியிருக்கிறார்கள் அவர்களுக்கு தகுந்த விளக்கத்தினை நான் கூற கடமைப்பட்டிருக்கிறேன். எங்களது தெய்வம் குடியிருந்த கோயிலான பங்களாவில் சம்பவம் நடந்த ஆண்டு அதிமுக ஆட்சி புரிந்து கொண்டிருந்தது மூன்று ஆண்டுகள் நல்லதொரு தீர்ப்பு வரும் என்று பொறுமையாக காத்துக் கொண்டிருந்தேன். அதன், பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது அடுத்த அரசாங்கம் இந்த வழக்கை விரைவாக முடித்து தீர்ப்பு வழங்குவார்கள் என்று அமைதியாக காத்துக் கொண்டிருந்தேன். இரண்டு தினம் முன்பு நியூஸ் 18 தொலைக்காட்சியில் நடந்த கொடநாடு சம்பவத்தைப் பற்றிய தொகுப்பை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது. நேற்றைய என்னுடைய பதிவில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது. மற்றவர்கள் மீது சந்தேகப்படுவதற்கு நான் காவல்துறையும் இல்லை, பத்திரிக்கையாளரும் இல்லை. சாதாரண மக்களின் ஒருவன். ஒன்றரை கோடி தொண்டர்களையும் தனது பிள்ளையாக கருதிய எனது தாய் வீட்டில் இந்த அநீதி நடந்திருக்கிறது இதற்கு நியாயம் கேட்க எங்கள் அம்மாவின் பிள்ளையாக எனக்கு கடமை இருக்கிறது. இந்த கொடநாடு சம்பவத்தை காலதாமதம் செய்து கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது. நமது கட்சிக்கு மேலும் களங்கப்படுத்தாமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், இந்த வழக்கை விரைவாக முடித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற கழக உண்மை தொண்டனின் எண்ணத்தை தான் நான் பதிவிட்டு இருந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், “ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பது போல, ஏற்கனவே கொளுந்துவிட்டு எரிந்துக்கொண்டு இருக்கும் ஒற்றை தலைமை விவகாரத்துக்கு இதுபோன்ற ‘சில்லரை’ பிரச்சனைகளால் மென்மேலும் எண்ணெய் ஊற்றும் செயலாக இருப்பதாக அதிமுகவின் உண்மை தொண்டர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.