கரூர் மாவட்டத்தில் கரூர் தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கண்டித்து 5ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது. இந்த போராட்டத்தில், மாவட்ட கல்வித்துறையில் விதியை மீறி, வேறு கல்வி மாவட்டத்துக்கு பணி மாறுதல் வழங்கிய சி.இ.ஓ., மதன் குமாரை கண்டித்து ஏழு பேரின் பணி மாறுதல் ஆணையை ரத்து செய்யக்கோரியும், சி.இ.ஓ., மதன்குமார் மீது, பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ஆசிரியர்கள் கண்டன குரல்களை எழுப்பினர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில பொதுச்செயலாளர் மயில், ”தொடக்க கல்வித்துறை ஆசிரியர் ஒருவரை முதன்மை கல்வி அலுவலர் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்தார். அதற்காக, முறையிட்டும் நீதி கிடைக்காத நிலையில், போராட்டம் நடத்திய 7 நபர்களை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து உத்தரவு போட்டுள்ளார். தன்னுடைய மாவட்டத்தில், தன்னை எதிர்த்து கல்வித்துறையில் போராடக்கூடாது என்ற நோக்கத்தில் முதன்மை கல்வி அலுவலர் செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல், ஒரு குற்றத்திற்காக இரண்டு தண்டனைகளை கரூர் மாவட்ட சி.இ.ஒ உருவாக்கி வருகின்றார். தவிர, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா விடுமுறையின் போது Zoom வழியாக நடைபெற்ற ஆசிரிய பயிற்றுநர்கள் கூட்டத்திற்கு தாமதமாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் தாமதமாக வந்தால் அவர்கள் ஆண் ஆசிரியர்களாக இருந்தால் மணி ஆட்டப்போனீர்களா? என்றும், பெண் ஆசிரியர்களாக இருந்தால் ஊர் மேயப்போனீர்களா? என்றும் தராதரமற்ற முறையில் பேசி வருகின்றார். ஆகவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இந்த போராட்டம் மூலம் கோரிக்கை விடப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.