கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த மாநில சட்டப்பேரவையில், பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான அவசர சட்டம் கொண்டுவர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பட்டியல் சாதிகளுக்கான (எஸ்சி) இடஒதுக்கீடு 15இல் இருந்து 17 சதவீதமாகவும், பட்டியல் பழங்குடியினருக்கான (எஸ்டி) இடஒதுக்கீடு 3இல் இருந்து 7 சதவீதமாகவும் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கர்நாடக மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீடு 56 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும் இந்த இடஒதுக்கீடு உயர்வை அரசியலமைப்பின் 9வது அட்டவணையின் கீழ் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும், இதுதொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்க அனுமதி கோரி ஆளுநருக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது